Skip to main content

ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்

ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை, ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பது பன்மை.

  • ஒருமை - பன்மை
  • புத்தகம் - புத்தகங்கள்
  • கால் - கால்கள்
  • மனிதர் - மனிதர்கள்

ஒருமை, பன்மை கொண்ட பெயர்ச்சொற்களை எழுதும்போது அவ்வவற்றிற்குத் தகுந்தாற்போல் வினைச்சொற்களைக் கொண்டு முடிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு: 'மாடு மேய்கின்றன' என்ற சொற்றொடரில் 'மாடு' ஒருமை. ஒருமைப் பெயரைக் குறிக்கும்போது 'மேய்கின்றன' என்ற பன்மை வினைச் சொல்லைப் பயன்படுத்துவது தவறு. 'மேய்கிறது' என்ற ஒருமை வினைச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

  • மாடு மேய்கின்றன - (தவறு)
  • மாடுகள் மேய்கின்றன - (சரி)
  • மாடு மேய்கிறது - (சரி)

வாக்கியங்களைப் பிழையின்றி எழுத சில இலக்கண நெறிகளைக் கையாள வேண்டும்.

  1. உயர்திணை எழுவாய் உயர்திணைப் பயனிலையை பெற்று வரும். அதே போன்று அஃறிணை எழுவாய்க்குப் பின் அஃறிணை வினைமுற்றே (து, று) வரவேண்டும்.

    • (எ.கா)
      • அவன் மிகவும் சிறந்தவன்.
      • சுப்பன் மிக நல்லவன்.
      • வண்டி வந்தது, கோழி கூவிற்று.
  2. எழுவாய் ஐம்பால்களுள் எதில் உள்ளதோ அதற்கேற்ற வினைமுற்றையே பயன்படுத்த வேண்டும்.

    • (எ.கா)
      • கோதை படித்தது - (தவறு)
      • கோதை படித்தாள் - (சரி)
  3. 'கள்' விகுதி பெற்ற எழுவாய், வினைமுற்றிலும் 'கள்' விகுதி பெறும். அதே போன்று எழுவாய் 'அர்' விகுதி பெற்றிருந்தால் மரியாதைப் பன்மை வினைமுற்றில் 'ஆர்' விகுதி வருதலும், பலர்பால் வினைமுற்றில் 'அர்' விகுதி வருதலும் தெரிந்து கொள்ளலாம்.

    • (எ.கா)
      • மாணவர்கள் தேர்வு எழுதினார் - (தவறு)
      • மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் - (சரி)
  4. எழுவாய் ஒருமையாயின் வினைமுற்றும் ஒருமையாகவே இருக்க வேண்டும்.

    • (எ.கா)
      • என் எழுதுகோல் இதுவல்ல - (தவறு)
      • என் எழுதுகோல் இதுவன்று - (சரி)
  5. தொடரில் காலத்தை உணர்த்தும் குறிப்புச் சொற்கள் இருப்பின் அதற்கேற்ற காலத்திலமைந்த வினைமுற்றையே எழுத வேண்டும்.

    • (எ.கா)
      • தலைவர் நாளை வந்தார் - (தவறு)
      • தலைவர் நாளை வருவார் - (சரி)
  6. கூறியது கூறல் ஒரே தொடரில் இடம்பெறக் கூடாது.

  7. வாக்கியத்தில் உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் கலந்து வந்தால், சிறப்புக் கருதின் உயர்திணைப் பயனிலை கொண்டும் இழிவு கருதின் அஃறிணைப் பயனிலை கொண்டும் வாக்கியத்தை முடிக்க வேண்டும்.

    • (எ.கா)
      • மூடனும் மாடும் குளத்தில் குளித்தனர் - (தவறு)
      • மூடனும் மாடும் குளத்தில் குளித்தன - (சரி)
  8. உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் விரவி வந்தால், மிகுதி பற்றி ஒரு துணைவினை கொண்டு முடித்தல் வேண்டும்.

    • (எ.கா) ஆற்று வெள்ளத்தில் மக்களும் மரங்களும் குடிசைகளும் ஆடுமாடுகளும் மிதந்து சென்றன.
  9. 'ஒவ்வொரு' என்னும் தொடர் ஒருமையையும், 'ஒவ்வொருவர்' என்னும் தொடர் பன்மையையும் வினைமுற்றாகக் கொள்ளும்.

    • ஒவ்வொரு:
      • ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்தது.
      • ஒவ்வொன்றும் நாள்தோறும் வெடிக்கிறது.
      • ஒவ்வொரு - உயிர்மெய் முன் வரும்.
      • ஒவ்வோர் - உயிர் முன் வரும்.
    • ஒவ்வொருவர்: 'ஒவ்வொருவர்' எனும் தொடர் பன்மை வினைமுற்றை கொள்ளும்.
      • செல்வி, லதா, கீதாஞ்சலி ஒவ்வொருவரும் நன்கு...
      • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உண்மையை...
  10. ஐயம் காட்டும் ஓகாரம் வரும்போது, பிரிப்புக்காக வரும் 'ஆவது' என்னும் சொல்லின் பின்னும் 'அல்லது' எனும் சொல் வருதல் கூடாது. வினைமுற்று ஒருமையாகவே முடியும்.

    • ஒன்றோ அல்லது இரண்டோ தருக - (தவறு)
    • ஒன்றோ இரண்டோ தருக - (சரி)
    • நாயாவது நரியாவது தின்றிருக்கும் - (தவறு)
    • நாய் அல்லது நரி தின்றிருக்கும் - (சரி)