சந்திப்பிழை அறிதல்
சந்திப் பிழையை நீக்குதல்
வல்லின எழுத்துக்கள் ஆறு - க், ச், ட், த், ப், ற். இவைகளில் க், ச், த், ப் ஆகிய எழுத்துகள் மிகவும் வலிமையானவை. ட், ற் ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வர இயலாதவை. இவை வல்லினம் என்று அழைக்கப்படும்.
வல்லினம் மிகும் இடங்கள்
-
இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும் (ஐ).
- குழந்தையை + கண்டேன் = குழந்தையைக் கண்டேன்
- பொருளை + தேடு = பொருளைத்தேடு
- புலியை + கொன்றான் = புலியைக் கொன்றான்
- நூலை + படி = நூலைப்படி
-
நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும்.
- வீட்டிற்கு + சென்றான் = வீட்டிற்குச் சென்றான்
- கல்லூரிக்கு + போனாள் = கல்லூரிக்குப் போனாள்
-
ஆறாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும். ('அது' - மறைந்திருப்பது)
- தாமரை + பூ = தாமரைப்பூ
- குதிரை + கால் = குதிரைக்கால்
-
ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும்.
- குடி + பிறந்தார் = குடிப்பிறந்தார்
- வழி + சென்றார் = வழிச்சென்றார்
-
வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் வர மிகும் (வல்லெழுத்தை அடுத்து வந்த).
- பாக்கு + தூள் = பாக்குத்தூள்
- தச்சு + தொழில் = தச்சுத்தொழில்
- கேட்டு + கொடு = கேட்டுக்கொடு
- பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
- படிப்பு + செலவு = படிப்புச்செலவு
- பற்று + தொகை = பற்றுத்தொகை
-
மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.
- இரும்பு + தூள் = இரும்புத்தூள்
- மருந்து + கடை = மருந்துக்கடை
- கன்று + குட்டி = கன்றுக்குட்டி
-
அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் 'எ' என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.
- அ + கடல் = அக்கடல்
- இ + பாடம் = இப்பாடம்
- உ + சிறுவன் = உச்சிறுவன்
- எ + தொழில் = எத்தொழில்
-
சுட்டு, வினாக்களின் திரிபுகளான அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
- அந்த + கிணறு = அந்தக்கிணறு
- இந்த + தமிழ் = இந்தத்தமிழ்
- எந்த + செயல் = எந்தச்செயல்
-
அந்த, இந்த, அப்படி, இப்படி என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
- அந்த + பையன் = அந்தப்பையன்
- இந்த + சிறுவன் = இந்தச்சிறுவன்
- அப்படி + செய் = அப்படிச்செய்
- இப்படி + பார் = இப்படிப்பார்
-
எந்த, எப்படி, எங்கு என்ற வினாச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
- எங்கு + பார்த்தாய் = எங்குப்பார்த்தாய்?
- எப்படி + சாதித்தாய் = எப்படிச்சாதித்தாய்?
- எந்த + செடி = எந்தச்செடி?
-
நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும் (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்).
- நிலா + சோறு = நிலாச்சோறு
- மழை + காலம் = மழைக்காலம்
- பனி + துளி = பனித்துளி
-
இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
- சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
- மார்கழி + திங்கள் = மார்கழித்திங்கள்
- மல்லி + பூ = மல்லிப்பூ
-
பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
- சதுரம் + பலகை = சதுரப்பலகை
- வட்டம் + பாறை = வட்டப்பாறை
- பச்சை + பட்டு = பச்சைப்பட்டு
-
அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
- தேட + சொன்னான் = தேடச்சொன்னான்
- வர + சொன்னான் = வரச்சொன்னான்
- ஓடி + பிடித்தான் = ஓடிப்பிடித்தான்
-
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.
- பூ + பறித்தான் = பூப்பறித்தான்
- கை + கரண்டி = கைக்கரண்டி
- தீ + பற்றியது = தீப்பற்றியது
-
ஆய், போய் என்னும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
- நன்றாய் + பேசினார் = நன்றாய்ப்பேசினார்
- போய் + தேடு = போய்த்தேடு
-
இனி, தனி, மற்று, மற்ற, மற்றை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
- இனி + காணலாம் = இனிக்காணலாம்
- தனி + தமிழ் = தனித்தமிழ்
- மற்று + கண்டவை = மற்றுக்கண்டவை
- மற்ற + பொருள்கள் = மற்றப்பொருள்கள்
- மற்றை + கூறுகள் = மற்றைக்கூறுகள்
-
என, ஆக என்னும் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.
- என + கூறினான் = எனக்கூறினான்
- ஆக + சொன்னான் = ஆகச்சொன்னான்
-
சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
- சால + சிறந்தது = சாலச்சிறந்தது
- தவ + பெரிது = தவப்பெரிது
-
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.
- உண்ணா + சோறு = உண்ணாச்சோறு
- ஓடா + குதிரை = ஓடாக்குதிரை
- அழியா + புகழ் = அழியாப்புகழ்
-
தனிக்குறிலையடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
- பலா + சுளை = பலாச்சுளை
- இரா + பகல் = இராப்பகல்
- கனா + காலம் = கனாக்காலம்
-
முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
- திரு + குறள் = திருக்குறள்
- பொது + சொத்து = பொதுச்சொத்து
-
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.
- தண்ணீர் + குடம் = தண்ணீர்க்குடம்
- மலர் + கூடை = மலர்க்கூடை
-
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.
- மரம் + பெட்டி = மரப்பெட்டி
- இரும்பு + சாவி = இரும்புச்சாவி
-
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.
- சட்டை + துணி = சட்டைத்துணி
- குடை + கம்பி = குடைக்கம்பி
-
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.
- அடுப்பு + புகை = அடுப்புப்புகை
- விழி + புனல் = விழிப்புனல்
-
உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
- பவளம் + பற்று = பவளப்பற்று
- மலர் + கண் = மலர்க்கண்
-
ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர்தொடர், நெடி தொடர் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்.
- வயிறு + போக்கு = வயிற்றுப்போக்கு (உயிர்த்தொடர்)
- முரடு + காளை = முரட்டுக்காளை
- நாடு + பற்று = நாட்டுப்பற்று (நெடில்தொடர்)
- காடு + தேன் = காட்டுத்தேன்
வல்லினம் மிகா இடங்கள்
-
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
- தமிழ் + கற்றார் = தமிழ் கற்றார்
- நீர் + குடித்தான் = நீர் குடித்தான்
- துணி + கட்டினான் = துணி கட்டினான்
-
உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.
- தாய் + தந்தை = தாய் தந்தை
- இரவு + பகல் = இரவு பகல்
- செடி + கொடி = செடி கொடி
-
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து மற்றப் பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.
- நல்ல + குழந்தை = நல்ல குழந்தை
- படித்த + பெண் = படித்த பெண்
- செய்யாத + செயல் = செய்யாத செயல்
-
உயர்திணைப் பொதுப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
- தொழிலாளர் + தலைவர் = தொழிலாளர் தலைவர்
- மாணாக்கர் + கூடினர் = மாணாக்கர் கூடினர்
- தாய் + பாடினாள் = தாய் பாடினாள்
-
அஃறிணை வினைமுற்றின் பின் வல்லினம் மிகாது.
- முழங்கின + சங்குகள் = முழங்கின சங்குகள்
- பாடின + குயில்கள் = பாடின குயில்கள்
- வந்தது + கப்பல் = வந்தது கப்பல்
-
எட்டு, பத்து தவிர மற்ற எண்களின் பின் வல்லினம் மிகாது.
- ஒன்று + கொடு = ஒன்று கொடு
- இரு + சீர் = இருசீர்
- மூன்று + கிளி = மூன்று கிளி
-
அது, இது என்னும் சுட்டுகளின் பின்னும் எது? யாது? என்னும் வினாச் சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.
- அது + போயிற்று = அது போயிற்று
- இது + பறந்தது = இது பறந்தது
- எது + கண்டது = எது கண்டது?
- யாது + சொல் = யாது சொல்?
-
அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
- அத்தனை + பழங்களா? = அத்தனை பழங்களா?
- இத்தனை + பூக்களா? = இத்தனை பூக்களா?
- எத்தனை + தேங்காய்? = எத்தனை தேங்காய்?
-
வினாவை உணர்த்தும் ஆ, ஓ, ஏ, யா என்னும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது.
- அவளா + தைத்தாள் = அவளா தைத்தாள்?
- இவளோ + போனாள் = இவளோ போனாள்?
- அவனே + செல்வான் = அவனே செல்வான்?
-
சில, பல என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
- பல + குடிசைகள் = பல குடிசைகள்
- சில + சொற்கள் = சில சொற்கள்
-
விளிப்பெயர் பின்னும், வியங்கோள் வினைமுற்றின் பின்னும் வல்லினம் மிகாது.
- கண்ணா + கேள் = கண்ணா கேள்
- வேலா + செல் = வேலா செல்
- வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
-
எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
- நாய் + போனது = நாய் போனது
- வள்ளி + படித்தாள் = வள்ளி படித்தாள்
-
வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
- ஊறு + காய் = ஊறுகாய்
- ஆடு + கொடி = ஆடு கொடி
- விரி + கதிர் = விரி கதிர்
-
அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது.
- தீ + தீ = தீ தீ
- பாம்பு + பாம்பு = பாம்பு பாம்பு
-
சில ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
- வள்ளுவர் + கருத்து = வள்ளுவர் கருத்து
-
அவை, இவை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.
- அவை + போயின = அவை போயின
- இவை + செய்தன = இவை செய்தன
-
படியென்னும் சொல் வினையோடு சேர்ந்து வருமிடத்தில் வல்லினம் மிகாது.
- வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான்
- போகும்படி + சொன்னான் = போகும்படி சொன்னான்
-
இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது.
- கல + கல = கலகல
- பள + பள = பளபள
-
அவை, இவை என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
- அவை + சென்றன = அவை சென்றன
- இவை + செய்தன = இவை செய்தன
-
அது, இது என்னும் சுட்டுகளின் பின்வரும் வல்லினம் மிகாது.
- அது + பறந்தது = அது பறந்தது
-
எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.
- எது + பறந்தது = எது பறந்தது?
- யாது + தந்தார் = யாது தந்தார்?
-
இரண்டு வடசொற்கள் சேரும்போது வல்லினம் மிகாது.
- சங்கீத + சபா = சங்கீத சபா
- மகாஜன + சபா = மகாஜன சபா
-
சில வினையெச்சத் தொடரில் வல்லினம் மிகாது.
- வந்து + போனான் = வந்து போனான்
- செய்து + கொடுத்தான் = செய்து கொடுத்தான்