Skip to main content

சந்திப்பிழை அறிதல்

சந்திப் பிழையை நீக்குதல்

வல்லின எழுத்துக்கள் ஆறு - க், ச், ட், த், ப், ற். இவைகளில் க், ச், த், ப் ஆகிய எழுத்துகள் மிகவும் வலிமையானவை. ட், ற் ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வர இயலாதவை. இவை வல்லினம் என்று அழைக்கப்படும்.

வல்லினம் மிகும் இடங்கள்

  1. இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும் (ஐ).

    • குழந்தையை + கண்டேன் = குழந்தையைக் கண்டேன்
    • பொருளை + தேடு = பொருளைத்தேடு
    • புலியை + கொன்றான் = புலியைக் கொன்றான்
    • நூலை + படி = நூலைப்படி
  2. நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும்.

    • வீட்டிற்கு + சென்றான் = வீட்டிற்குச் சென்றான்
    • கல்லூரிக்கு + போனாள் = கல்லூரிக்குப் போனாள்
  3. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும். ('அது' - மறைந்திருப்பது)

    • தாமரை + பூ = தாமரைப்பூ
    • குதிரை + கால் = குதிரைக்கால்
  4. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும்.

    • குடி + பிறந்தார் = குடிப்பிறந்தார்
    • வழி + சென்றார் = வழிச்சென்றார்
  5. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் வர மிகும் (வல்லெழுத்தை அடுத்து வந்த).

    • பாக்கு + தூள் = பாக்குத்தூள்
    • தச்சு + தொழில் = தச்சுத்தொழில்
    • கேட்டு + கொடு = கேட்டுக்கொடு
    • பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
    • படிப்பு + செலவு = படிப்புச்செலவு
    • பற்று + தொகை = பற்றுத்தொகை
  6. மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.

    • இரும்பு + தூள் = இரும்புத்தூள்
    • மருந்து + கடை = மருந்துக்கடை
    • கன்று + குட்டி = கன்றுக்குட்டி
  7. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் 'எ' என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.

    • அ + கடல் = அக்கடல்
    • இ + பாடம் = இப்பாடம்
    • உ + சிறுவன் = உச்சிறுவன்
    • எ + தொழில் = எத்தொழில்
  8. சுட்டு, வினாக்களின் திரிபுகளான அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

    • அந்த + கிணறு = அந்தக்கிணறு
    • இந்த + தமிழ் = இந்தத்தமிழ்
    • எந்த + செயல் = எந்தச்செயல்
  9. அந்த, இந்த, அப்படி, இப்படி என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

    • அந்த + பையன் = அந்தப்பையன்
    • இந்த + சிறுவன் = இந்தச்சிறுவன்
    • அப்படி + செய் = அப்படிச்செய்
    • இப்படி + பார் = இப்படிப்பார்
  10. எந்த, எப்படி, எங்கு என்ற வினாச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

    • எங்கு + பார்த்தாய் = எங்குப்பார்த்தாய்?
    • எப்படி + சாதித்தாய் = எப்படிச்சாதித்தாய்?
    • எந்த + செடி = எந்தச்செடி?
  11. நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும் (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்).

    • நிலா + சோறு = நிலாச்சோறு
    • மழை + காலம் = மழைக்காலம்
    • பனி + துளி = பனித்துளி
  12. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

    • சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
    • மார்கழி + திங்கள் = மார்கழித்திங்கள்
    • மல்லி + பூ = மல்லிப்பூ
  13. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

    • சதுரம் + பலகை = சதுரப்பலகை
    • வட்டம் + பாறை = வட்டப்பாறை
    • பச்சை + பட்டு = பச்சைப்பட்டு
  14. அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

    • தேட + சொன்னான் = தேடச்சொன்னான்
    • வர + சொன்னான் = வரச்சொன்னான்
    • ஓடி + பிடித்தான் = ஓடிப்பிடித்தான்
  15. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.

    • பூ + பறித்தான் = பூப்பறித்தான்
    • கை + கரண்டி = கைக்கரண்டி
    • தீ + பற்றியது = தீப்பற்றியது
  16. ஆய், போய் என்னும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

    • நன்றாய் + பேசினார் = நன்றாய்ப்பேசினார்
    • போய் + தேடு = போய்த்தேடு
  17. இனி, தனி, மற்று, மற்ற, மற்றை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

    • இனி + காணலாம் = இனிக்காணலாம்
    • தனி + தமிழ் = தனித்தமிழ்
    • மற்று + கண்டவை = மற்றுக்கண்டவை
    • மற்ற + பொருள்கள் = மற்றப்பொருள்கள்
    • மற்றை + கூறுகள் = மற்றைக்கூறுகள்
  18. என, ஆக என்னும் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.

    • என + கூறினான் = எனக்கூறினான்
    • ஆக + சொன்னான் = ஆகச்சொன்னான்
  19. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.

    • சால + சிறந்தது = சாலச்சிறந்தது
    • தவ + பெரிது = தவப்பெரிது
  20. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.

    • உண்ணா + சோறு = உண்ணாச்சோறு
    • ஓடா + குதிரை = ஓடாக்குதிரை
    • அழியா + புகழ் = அழியாப்புகழ்
  21. தனிக்குறிலையடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.

    • பலா + சுளை = பலாச்சுளை
    • இரா + பகல் = இராப்பகல்
    • கனா + காலம் = கனாக்காலம்
  22. முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

    • திரு + குறள் = திருக்குறள்
    • பொது + சொத்து = பொதுச்சொத்து
  23. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

    • தண்ணீர் + குடம் = தண்ணீர்க்குடம்
    • மலர் + கூடை = மலர்க்கூடை
  24. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

    • மரம் + பெட்டி = மரப்பெட்டி
    • இரும்பு + சாவி = இரும்புச்சாவி
  25. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

    • சட்டை + துணி = சட்டைத்துணி
    • குடை + கம்பி = குடைக்கம்பி
  26. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

    • அடுப்பு + புகை = அடுப்புப்புகை
    • விழி + புனல் = விழிப்புனல்
  27. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.

    • பவளம் + பற்று = பவளப்பற்று
    • மலர் + கண் = மலர்க்கண்
  28. ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர்தொடர், நெடி தொடர் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்.

    • வயிறு + போக்கு = வயிற்றுப்போக்கு (உயிர்த்தொடர்)
    • முரடு + காளை = முரட்டுக்காளை
    • நாடு + பற்று = நாட்டுப்பற்று (நெடில்தொடர்)
    • காடு + தேன் = காட்டுத்தேன்

வல்லினம் மிகா இடங்கள்

  1. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

    • தமிழ் + கற்றார் = தமிழ் கற்றார்
    • நீர் + குடித்தான் = நீர் குடித்தான்
    • துணி + கட்டினான் = துணி கட்டினான்
  2. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.

    • தாய் + தந்தை = தாய் தந்தை
    • இரவு + பகல் = இரவு பகல்
    • செடி + கொடி = செடி கொடி
  3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து மற்றப் பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.

    • நல்ல + குழந்தை = நல்ல குழந்தை
    • படித்த + பெண் = படித்த பெண்
    • செய்யாத + செயல் = செய்யாத செயல்
  4. உயர்திணைப் பொதுப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

    • தொழிலாளர் + தலைவர் = தொழிலாளர் தலைவர்
    • மாணாக்கர் + கூடினர் = மாணாக்கர் கூடினர்
    • தாய் + பாடினாள் = தாய் பாடினாள்
  5. அஃறிணை வினைமுற்றின் பின் வல்லினம் மிகாது.

    • முழங்கின + சங்குகள் = முழங்கின சங்குகள்
    • பாடின + குயில்கள் = பாடின குயில்கள்
    • வந்தது + கப்பல் = வந்தது கப்பல்
  6. எட்டு, பத்து தவிர மற்ற எண்களின் பின் வல்லினம் மிகாது.

    • ஒன்று + கொடு = ஒன்று கொடு
    • இரு + சீர் = இருசீர்
    • மூன்று + கிளி = மூன்று கிளி
  7. அது, இது என்னும் சுட்டுகளின் பின்னும் எது? யாது? என்னும் வினாச் சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

    • அது + போயிற்று = அது போயிற்று
    • இது + பறந்தது = இது பறந்தது
    • எது + கண்டது = எது கண்டது?
    • யாது + சொல் = யாது சொல்?
  8. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

    • அத்தனை + பழங்களா? = அத்தனை பழங்களா?
    • இத்தனை + பூக்களா? = இத்தனை பூக்களா?
    • எத்தனை + தேங்காய்? = எத்தனை தேங்காய்?
  9. வினாவை உணர்த்தும் ஆ, ஓ, ஏ, யா என்னும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது.

    • அவளா + தைத்தாள் = அவளா தைத்தாள்?
    • இவளோ + போனாள் = இவளோ போனாள்?
    • அவனே + செல்வான் = அவனே செல்வான்?
  10. சில, பல என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

    • பல + குடிசைகள் = பல குடிசைகள்
    • சில + சொற்கள் = சில சொற்கள்
  11. விளிப்பெயர் பின்னும், வியங்கோள் வினைமுற்றின் பின்னும் வல்லினம் மிகாது.

    • கண்ணா + கேள் = கண்ணா கேள்
    • வேலா + செல் = வேலா செல்
    • வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
  12. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.

    • நாய் + போனது = நாய் போனது
    • வள்ளி + படித்தாள் = வள்ளி படித்தாள்
  13. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

    • ஊறு + காய் = ஊறுகாய்
    • ஆடு + கொடி = ஆடு கொடி
    • விரி + கதிர் = விரி கதிர்
  14. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது.

    • தீ + தீ = தீ தீ
    • பாம்பு + பாம்பு = பாம்பு பாம்பு
  15. சில ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

    • வள்ளுவர் + கருத்து = வள்ளுவர் கருத்து
  16. அவை, இவை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.

    • அவை + போயின = அவை போயின
    • இவை + செய்தன = இவை செய்தன
  17. படியென்னும் சொல் வினையோடு சேர்ந்து வருமிடத்தில் வல்லினம் மிகாது.

    • வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான்
    • போகும்படி + சொன்னான் = போகும்படி சொன்னான்
  18. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது.

    • கல + கல = கலகல
    • பள + பள = பளபள
  19. அவை, இவை என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

    • அவை + சென்றன = அவை சென்றன
    • இவை + செய்தன = இவை செய்தன
  20. அது, இது என்னும் சுட்டுகளின் பின்வரும் வல்லினம் மிகாது.

    • அது + பறந்தது = அது பறந்தது
  21. எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.

    • எது + பறந்தது = எது பறந்தது?
    • யாது + தந்தார் = யாது தந்தார்?
  22. இரண்டு வடசொற்கள் சேரும்போது வல்லினம் மிகாது.

    • சங்கீத + சபா = சங்கீத சபா
    • மகாஜன + சபா = மகாஜன சபா
  23. சில வினையெச்சத் தொடரில் வல்லினம் மிகாது.

    • வந்து + போனான் = வந்து போனான்
    • செய்து + கொடுத்தான் = செய்து கொடுத்தான்